Tuesday, January 24, 2006

9/11 & Ground Zero

9/11 இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது.



அன்று துபாய்க்கு அலுவல் வேலையாகச் செல்ல வேண்டியிருந்தபடியால், மதியம் காரை எடுத்துக்கொண்டு நானும் எனது சக அலுவலக நண்பன் ராமும் மஸ்கட்டிலிருந்து கிளம்பி நிறுத்தாமல் பயணம் செய்து, இரவு தங்குமிடத்திற்குச் சென்று தொலைக்காட்சியைப் போட்டால் சிஎன்என்-னில் "AMERICA UNDER ATTACK!" என்று கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி ஓட, உலக வர்த்தக மைய கட்டிடத்தில் ஒன்று கழுத்துப் பகுதியில் எரிந்துகொண்டிருந்தது.


சற்று நேரத்திலேயே இரண்டாவது கோபுரத்தின் மீது இன்னொரு விமானம் மோதித் துளைத்ததையும் பார்த்து கல்லாய்ச் சமைந்து போனது நினைவுக்கு வருகிறது. அடுத்து பென்டகன் மீது விழுந்த விமானத்தையும் காட்ட அதிர்ச்சியலைகள் அடுக்கடுக்காய் மொத்த உலகத்தையும் தாக்கத் துவங்கின. ஜன்னல் வழியே கைக்குட்டையை அசைத்து உதவி கோரிய அந்த முகங்கள்! வெளியே குதித்து விழுந்தவர்கள்!


நாங்கள் சந்திப்பதற்காகச் சென்றிருந்த நிறுவனத்தின் மேலாளர், அவரது பையன் முதல் கோபுரத்தில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தானாம். அவரால் கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை. தொலை தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டிருக்க அவரால் மகனைத் தொடர்பு கொள்ள முடியாமல்; என்ன நடந்ததென்று தெரியாமல் தவித்துப்போனார்.



மறுநாள் மாலையில் அவன் எங்கிருந்தோ அழுதுகொண்டே தொலைபேசியதும்தான் இவருக்குப் போன உயிர் திரும்ப வந்தது. வர்த்தக மையத்திற்கு அருகிலிருந்த விடுதியில் தங்கியிருந்தவன் சற்று தாமதமாகக் கிளம்பி, மையத்தில் நுழையும் சமயத்தில் விமானம் இடித்ததும் களேபரத்தில் திரும்ப விடுதியறைக்கு ஓட, அங்கிருந்த அனைவரையும் காலிசெய்யச் சொல்லி எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ச்சியாக வர, அனைத்து உடைமைகளையும் அப்படியே போட்டுவிட்டுக் நீண்ட தூரம் ஓடிச்சென்று நின்று பார்த்ததும்தான் சூழ்நிலையின் பயங்கரம் புரிந்திருக்கிறது அவனுக்கு. அவன் தங்கியிருந்த விடுதிக் கட்டிடமும் இடிந்து போயிருக்கிறது.



நினைக்க நினைக்க அதிர்ச்சி எந்த அளவு ஏற்பட்டதோ அந்த அளவு இச்சதிச் செயலின் பிரம்மாண்டத்தை நினைத்து மலைப்பும் ஏற்படாமல் இருக்கவில்லை. எவ்வளவு பெரிய நாசகாரத் திட்டம்! எந்த அளவிற்கு நுணுக்கமாக, துல்லியமாகத் திட்டமிட்டிருப்பார்கள்! யாருமே கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத பயங்கரத் திட்டம்!


விமானத்தில் பயணம் செய்கையில், இந்த விமானம் ஏதோ ஒரு கட்டிடத்தில் அசுரவேகத்தில் சென்று மோதப் போகிறது என்று பயணிகளுக்குத் தெரிந்தால் எப்படி இருக்கும்? மனதில் என்ன தோன்றும்? இனி நடக்கவே கூடாது என்று தோன்றும் பயங்கரம்!


எதுவுமே பாதுகாப்பில்லை என்று மறுபடி மறுபடி உணர்த்தும் பயங்கரம்!


தரைமட்டமாகிப் - ஏன் பள்ளமாகிப்- போன கட்டிடங்கள் இருந்த இடம் Ground Zero என்று அழைக்கப் பட, இன்னும் நூற்றுக்கணக்கில் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.


நியூயார்க்கில் மற்ற இடங்களைச் சென்று பார்ப்பதற்கும், Ground Zero வைப் பார்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்றிருக்கிறது. அது Ground Zero வைப் பார்ப்பவர்கள் முகத்தில் காணப்படும் இறுக்கம்; ஒருவித சோகம்; காணாமல் போன புன்னகை.

அழிவுச் சின்னமாக நிற்கும் மிச்சங்களைப் பார்க்கையில் மனம் வருந்துகிறது.

அண்ணாந்து ஆகாயத்தைப் பார்க்கையில், இதை மறைத்துக்கொண்டு வானளாவிய கட்டிடங்கள் இரண்டு நின்றுகொண்டிருந்தன; ஆயிரக்கணக்கில் மனிதர்கள் உள்ளே இருந்தார்கள்; எல்லா நாட்களையும் போன்று பரபரப்பான அலுவல் நாள் ஒன்றில் கூண்டோடு மரித்துப் போனார்கள் என்று நினைக்கையில் துக்கமாக இருக்கிறது. எத்தனை எத்தனை உயிர்கள்! அவர்களின் கனவுகள்; உறவுகள் - எல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போனது!



ஒரு வேளை ஆவியாய் அலைந்துகொண்டிருப்பார்களோ என்று கற்பனை ஓடியது.

தடுப்புக் கம்பிவேலியில் சாய்ந்து தரையில் அமர்ந்து கொண்டு வெண்தாடியுடன் அந்த நபர் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார். புல்லாங்குழலின் தனியிசை அந்த இறுக்கமான சூழ்நிலைக்குப் பொருந்தி கேட்பவரின் மன இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது. பார்வையாளர்கள் குறைவாகப் பேசி, நிறைய காட்சிகளை உள்வாங்கிக்கொண்டிருந்தார்கள்.



என்னையறியாமலேயே பெருமூச்சு எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.

உலக வரலாற்றில் நீண்ட காலம் அழியாமல் இருக்கும் கரும்புள்ளியாக Ground Zero இருக்கும்!



***

No comments:

Add to Technorati Favorites